டில்லி:

தனது கையெழுத்தை போலியாக போட்டு, அதன் மூலம் ரூ.4.5 கோடி மோசடி செய்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி ஆர்த்தி, தனது தொழில் பங்காளி  மீது புகார் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேவாக் தனது மனைவி ஆர்த்தியுடன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர், விரேந்திர சேவாக். இவர் மனைவி ஆர்த்தி இவர் சிலருடன் இணைந்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், ஆர்த்தியின் கையெழுத்தை, அவருடன் இணைந்து தொழில் செய்து வரும் பங்காளி ஒருவர், முறைகேடாக பயன்படுத்தி நிறுவனம் ஒன்றில் ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காத நிலையில், கடன் கொடுத்த நிறுவனம், ஆர்த்தியிடம் விசாரிக்க, இந்த முறைகேடு அம்பலத்துக்கு வந்தது.

இதுகுறித்து, ஆர்த்தி டில்லி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில்,  தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியும் கணவர் வீரேந்திர சேவாக்கின் பெயரை தவறாகப் பயன்படுத்தியும் இந்த கடன் வாங்கப்பட்டிருக்கிறது என்றும் இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது, அந்த கடனுக்காக முன் தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி சென்றுள்ளன. தன்னை திட்டமிட்டு இந்த முறைகேட்டில் சிக்க வைத்துள்ள தொழில் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.