சென்னை: திமுகவின் 10 மாத ஆட்சியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான  கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு இன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் மற்றும் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது  தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 12 வருடங்களுக்கு மேல் ஆன கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு என ரூ 100 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது  என்று கூறியவர்,   அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு அத்துமால் கல் போடப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது என்றவர், பழனியில்இரண்டு வருடங்களுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார்.

மேலும், தமிழக கோவில்களில் இருந்து  வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சாமி சிலைகள் இதுவரை 872 சிலைகள் மீட்க்கப்பட்டு உள்ளது என்று கூறியவர், திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் ரூ 2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.