சென்னை: தமிழ்நாட்டில் மழை அளவீடுகள் கணிக்க ரூ.25 கோடி செலவில் 1,000 தானியங்கி மழைமானிகள் நிறுவ தமிழகஅரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கடும் மழை வெள்ளம் ஏற்பட்டு, சென்னை வெள்ளத்தில் மிதந்தது. கடந்த 2015ம் ஆண்டு நிலைமை மீண்டும் திரும்பி இருப்பதாக சென்னைவாசிகள் குற்றம் சாட்டினர். மேலும், மழை வெள்ளம் தொர்பாக சென்னை வானிலை ஆய்வு மையமும் முறையான தகவல் வெளியிடவில்லை. இதற்கு அங்குள்ள மழை வெள்ளத்தை கணிக்கும் இயந்திரம் பழுதாக இருந்ததாக கூறப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகஅரசே மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை கணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  தமிழகத்தில் தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படவுள்ளன என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 34 ஆறுகள், 17 ஆற்று வடிநிலங்கள், 127 உப விளை நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் சராசரி மழை 960 மி.மீ என்று தகவல் கூறப்படுகிறது. இதில், தென்மேற்கு பருவமழை மூலம் சராசரி 439 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் சராசரி 440 மி.மீட்டர் மழை கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்பரப்பு நீர் பற்றிய நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்க தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் 1,166 பிர்காக்களில் 1,000 பிர்காக்களில் ஏற்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை டெண்டர் வெளிப்படை தன்மை சட்டம் 2000-ன் கீழ் உள்ள நடைமுறைகளை பின்பற்றி தானியங்கி மழை மானிகளை கொள்முதல் செய்தல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.