சென்னை: தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு  பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில், தமிழகஅரசு வேட்டி சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 21 பொருட்கள் கூடிய பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, பச்சரி, சர்க்கரை உடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.2356.67 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.