சென்னை: இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 1492 கோவில்களில் இருந்து ரூ. 21 கோடி வாடகை வசூல் செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

மாநிலம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும 5 ஆயிரத்து 720 கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு,  1492 கோவில்கள் மூலமாக நவம்பர் 1 முதல் 30 வரை ரூ. 21 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடந்த 8.10.2021 அன்று இணையவழி முறையில் கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி 5 ஆயிரத்து 720 கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு, 1492 கோவில்கள் மூலமாக இதுவரை ரூபாய் 21 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் 15–ம் தேதி வரை ரூ.10 கோடி வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.21 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாடகை நிலுவை தொகையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கணினி மூலம் வாடகை, குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர், வாடகைதாரர்கள் வழக்கம் போல் கோவில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் ரசீதினை பெற்றுக்கொள்ளலாம். வாடகை வசூல் மையம் அமைக்க இயலாத நிலையில் உள்ள கோவில்களில் வாடகை செலுத்த விரும்புவோர் அருகில் உள்ள பெரிய கோவில்களில் அமைந்துள்ள பொது வசூல் மையத்தில் கேட்பு தொகையினை செலுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு அறநிறுவனத்திற்கும் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானத்தினை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏதுவாகும். வசூல் முறையாக நடக்கிறதா என்பதனை தொடர்ந்து கண்காணித்து, வருமானம் ஈட்டாத சொத்துக்களை ஏலத்திற்கு, குத்தகைக்கு கொண்டு வந்து, அறநிறுவனங்களுக்கான வருவாயினைப் பெருக்கிட இயலும். முறையாக பணம் செலுத்தாத நபர்களின் விவரங்களையும் இணைய வழியாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலுவை தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.