சென்னை:

மிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு தலா ரூ.2000 மாதந் தோறும் வழங்கப்படும் என  திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் அறிவித்தார்.

இது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக அரசு அறிவித்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இதற்கு பதில் தெரிவித்த முதல்வர், இந்த திட்டம்  தேர்தலுக்காக அறிவிக்கவில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்றது.

இது தொடர்பான விவாதத்தில் பங்கு கொண்டு பேசிய திமுக எம்எல்ஏ பொன்முடி,  முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.  தேர்தலுக்காக இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளார், இதன் மூலம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது நிழல் பட்ஜெட் என்பதும், முதல்- அமைச்சர் வெளியிட்டது நிஜ பட்ஜெட் என்றும் தெரியவருகிறது என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ், நாங்கள் அறிவிக்கும் பட்ஜெட் நிஜம் என்பதால் தான் அம்மாவின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். உங்கள் (தி.மு.க.) ஆட்சியில், நீங்கள் அறிவித்ததுதான் நிழல் பட்ஜெட், எனவே நிஜ பட்ஜெட்டுக்கு மக்கள் ஆதரவு அளித்து எங்களை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் என்றார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பேசும்போது,  நாங்கள் அறிவித்த திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை உறுப்பினர் தெரிவிக்க வேண்டும், கஜா புயலில் ஆயிரக்கணக்கான ஏழைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். இவற்றையெல்லாம் ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான் ஏழை தொழிலாளர்களுக்காக இந்த திட்டம் அறிவிக்கப்படு கிறது.

இந்த 2000 ரூபாய் அறிவிப்பு திட்டம் தேர்தலுக்காக அல்ல. அனைத்து தொழி லாளர்களுக்கும் இந்த உதவி கிடைக்கும் என்றவர், இதில் அந்த கட்சி, இந்த கட்சி என்று பாகுபாடு பார்க்கப்படாது என்றும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த ரூ.2000 உதவி கிடைக்கும் என்றவர்,

இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் கிடைக்கும் என்றும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் பணம்  செலுத்தப்படும் என்றும் இதன் காரணமாக சுமார் 60 லட்சம் பேர் பலனடைவார்கள் என்ற முதல்வர்,  இந்த திட்டத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? என்பதை சொல்ல வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய பொன்முடி,  இந்த திட்டத்தை வேண்டாம் என்று சொல்ல வில்லை. அதில் வேறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்தபோது இதை ஏன் அறிவிக்கவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற சில விவாதங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பேசிய பொன்முடி,  விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும், கரும்பு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள்.  ஆனால் குறைந்த அளவுதான் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று அம்மா ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,  கூட்டுறவு கடன் வாங்கிய விவசாயிகளில் 83.62 சதவீதம் பேர் கடன்களை திருப்பி செலுத்தி இருக்கிறார்கள். யாரும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களைத்தான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிறார்கள் என்று கூறினார்.

பின்னர் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன்:- 2006ம் ஆண்டு,  ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி செய்வதாக தி.மு.க. அறிவித்தது. அவை அனைத்தையும் தள்ளுபடி செய்து அதற்கான உத்தரவுகளையும் அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம் என்றார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ரூ.7,000 கோடியை முழுமை யாக தள்ளுபடி செய்யவில்லை. குறைந்த அளவு பணத்தைத்தான் தள்ளுபடி செய்தீர்கள் என்று மறுப்பு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின்,  நாங்கள் சொன்னபடி அனைத்து விவசாயிகளுக்கும் கடன்களை தள்ளுபடி செய்தோம். அந்த தொகை ஒருவேளை குறைவாக இருக்கலாம். அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து விட்டோம் என்பதுதான் உண்மை என்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஸ்டாலின் பேச்சுக்கு பதில் தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி,  ரூ.7,000 கோடி என்று சொல்லிவிட்டு ரூ.5,000 கோடி கடன்தான் தள்ளுபடி செய்யப்பட்டன. அதைத்தான் அமைச்சர் கூறுகிறார். அம்மாவின் ஆட்சியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்படுகிறது.  அரசு பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.3,200 கோடி பெற்றுத் தந்து இருக்கிறோம். விவசாயிகள் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

அதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இறப்புக்கு, ஈமச்சடங்கு மானியம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது,  எதிர்க்கட்சி துணைத் தலைவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈமச்சடங்கு நிதி சரியாக போய் சேரவில்லை என்ற ஒருகருத்தை இங்கே சொன்னார். அதற்கு விளக்கத்தை தர விரும்புகின்றேன்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தவர்களில் எவரேனும் இறந்தால் அன்னாரின் இறுதிச் சடங்கு செலவு களுக்காக இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது.

இதற்காக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடநலத்துறைக்கு ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது.  இத்திட்ட நிதியினை ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், கோயம்புத்தூர், திருப்பூர் மாநகராட்சிகளுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

2018-19-ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 கோடி ரூபாயில் இதுவரை 4.67கோடி ரூபாய்உதவித் தொகை 18,692 நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க் கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். ஏதேனும் ஈமச்சடங்குநிதி முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி இருக்கின்றார்களா?

அப்படி ஏதாவது புகார் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஈமச்சடங்கு நிதி உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க் கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

2018-19-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டநிதி 5 கோடி ரூபாய். ஆகவே, அதிலே மீதி இருக் கிறது. 4.67 கோடி ரூபாய் தான் செலவழிக்கப்பட்டு இருக்கின்றது. 18,692 நபர்கள் அதற்கு மனு செய்திருக்கின்றார்கள், விண்ணப்பம் செய்திருக்கின்றார்கள்.

இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி வழங்கப்படு கின்றது. ஏதேனும் விடுபட்டிருந்தால், அவர்கள் அதை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால், அவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதே உள்ளாட்சித் துறை. நான் ஏற்கனவே சொன் னதைப் போல ஊரகவளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள்தான், இந்த ஈமச்சடங்கு நிதியை அளிக்கின்றார்கள்.

ஆகவே, அதில் குறைபாடுகள் இருந்தால், நீங்கள் சுட்டிக்காட்டினால், யாருக்காவது ஈமச்சடங்குநிதி கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவர்களுக்கு நிதி கிடைக்கப் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.