சென்னை

நேற்றிரவு விடிய விடிய நடந்த  சோதனையில் தமிழகத்தில் ரூ. 2 கோடி பணம் சிக்கி உள்ளது.

நேற்று முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது எனவே தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் 702 நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கு மூன்று பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் இவர்கள், எட்டு மணி நேரம் அடிப்படையில், மூன்று ஷிப்ட்டாக பணிபுரிவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பூக்கடை உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்துறை, மூவரைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பைகளில் வைத்திருந்த கட்டுக்கட்டான பணத்தைப் பார்த்து காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நேற்றிரவு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் இதுவரை ரூ.2 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.