சென்னை:  தமிழ்நாட்டில், ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.  இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள், அரசின் திட்டங்களின் பலன்கள் தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெறவுள்ள அம்சங்களை இறுதி செய்வது, மேலும் கடந்த கூட்டத் தொடர்களின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, மற்றும் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் அறிவிக்க உள்ள துறை சார்ந்த திட்டங்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாகவும், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு; ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் 8,726 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலீடுகள் வருகின்றன; 8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவைக்கு முடிவு செய்துள்ளது.

மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டில் ஏராளமான முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பரந்தூரில் வரவுள்ள விமான நிலையத்தை ஒட்டி ஏற்கனவே தொழில் பூங்காக்கள் உள்ளன என்று தெரிவித்தார்.