சென்னை

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரு1000 பயண அட்டை விற்பனையை வரும் 23 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

நேற்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 2024 ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரையிலான செல்லத்தக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, அனைத்து மாநகரப் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆயினும், கடந்த 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை, 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு, 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன் கருதி இந்தமுறை மாதாந்திர சலுகை மற்றும் ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டையின் விற்பனை வருகிற 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். பயணிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” 

என்று கூறப்பட்டுள்ளது.