சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி  பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவிதிகம் பிடித்தம் செய்யப்படும் என்றும் 2 ஆண்டுகளுக்கு தொகுதி மேம்மாட்டு நிதி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது. அந்த நிதி அனைத்தும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசும் மத்திய அரசின் நடவடிக்கையை பின்பற்றி அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூடியிருப்பதாவது,

எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய டிவிட்டரி-ல், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்னையில் முதல்வர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், எதிர்கட்சித் தலைவர் டிவிட்டரி-ல் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 இலட்சம் அந்தந்த தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மேலும், கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயினை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.