சென்னை:  தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் விதிகளை மீறி எடுத்துச்சென்ற  ரூ.1.39 லட்சம் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  அரசியல் கட்சிகள் ஊர்வலம் நடத்த சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும்  தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறும்போது, “அனைத்து அரசியல் கட்சிகளும், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்ற வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் சுவரொட்டிகள் அனுமதிக்கப்படுவது ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளது. அதனால்,  சுவரொட்டிகள் ஒட்டியிருந்தால், அவற்றை அவர்களே அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,  மாநகராட்சி சார்பிலும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.  நேற்று வரை (28ந்தேதி) அரசுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 3,688, தனியாருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 2,528 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இ ன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. அதிகாரிகளுக்கு முழுமையாக அகற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. இதுதொடர்பான தகவல் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த வழிகாட்டுதல்களை  அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் நடத்துவது என்றால், காலை 8 மணி முதல் இரவு 8 மணிக்குள் தான் நடத்த வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வரும் ஜனவரி 31-ம் தேதி வரை சைக்கிள் பேரணி, ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை. அதேபோல் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்கும் அனுமதியில்லை. அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சமாக நூறு பேர் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், சென்னையில் நேற்று பறக்கும் படையினரால், ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் தொடர்பாக வரும் திங்கள்கிழமை 27,812 அதிகாரிகளுக்கு 24 மையங்களில் தேர்தல் குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இவ்வாறு கூறினார்.