ராம் சரண் தேஜா – ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் வெறித்தனமான ரசிகர்களை சமாளிக்க ஆந்திர தியேட்டரில் இரும்பு முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மார்ச் 25 ம் தேதி ரிலீசாகிறது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகும் இப்படம் ஆந்திராவில் முதல் நாள் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களாக வலம் வரும் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து உள்ளூர் நிர்வாகம் மட்டுமன்றி தியேட்டர் அதிபர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள சூர்யா தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் தங்கள் இருக்கையை விட்டு திரைக்கு அருகில் செல்லாமல் இருக்க இரும்பு முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூர்யா திரையரங்கு நிர்வாகி கூறுகையில், “இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்களை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.