ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் – மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் (ஆர்பிஎஃப்) நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கியால் சுட்ட ரயில்வே காவலர் கைது செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூர் மும்பை ரயில் இன்று வழக்கம்போல் இயக்கப்பட்டது. அப்போது, அங்கு இருந்த காண்ட்பிள் ஒருவர்,  பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு காவலர் மற்றும் 3 பயணிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தஹிசார்  ரயில் நிலையம் அருகே, ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்றால். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள், அந்த  கான்ஸ்டபிளை பிடித்து, அடித்து துவைத்தனர். இதையடுத்து, அவர் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி “12956” என்ற எண் கொண்ட ஜெய்ப்பூர் – மும்பை விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று காலை பால்கர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் ரயிலில் இருந்த பயணிகள் அச்சத்தால் கூச்சலிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு ரயில்வே கூறுகையில், “ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்ததும் ஆர்.பி.எஃப். காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் ஆர்.பி.எஃப் துணை காவல் ஆய்வாளர் (ஆர்.பி.எஃப் ஏ.எஸ்.ஐ). மற்றும் மூன்று பயணிகளை சுட்டுவிட்டு தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை போலீஸ் அதிகாரிகள் ஆயுதத்துடன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று விளக்கம் அளித்துள்ளது.

ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.