சென்னை:

சென்னையில் தொடர்ச்சியாக நடந்து வந்த ராயல் என்பீல்டு பைக் திருட்டை ஒரே ஆளாக கண்டுபிடித்த சென்னை காவலர் சரவணனுக்கு சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

சென்னையில் தொடர்ச்சி யாக புல்லட் பைக்குகள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தபோது, தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ஜமாலுதீன்(39) புல்லட் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, நண்பர்களான மாதவரம் கனகசத்திரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சையத் இப்ராகிம் (30), வேலூர் மாவட்டம் பேரணம்பேட்டையை சேர்ந்த அமீர் (25) ஆகியோருடன் சேர்ந்து, தொடர்ச்சியாக புல்லட் பைக்குகளை திருடி வாட்ஸ்அப் குழு மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, 16 புல்லட் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

இந்த பைக் திருட்டை ஒரே ஆளாக கண்டுபிடித்த சென்னை காவலர் சரவணனுக்கு சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பைக்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.