சென்னை: 
சென்னை பெருங்களத்தூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த சுமையுந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியைச் சேர்ந்த அஜய், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராகுல், சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நாளை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்துள்ளனர். இரவு 12 மணியளவில் தியாகராயநகரில் இருந்து, வண்டலூர் வரை சென்று வருவதற்காக வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். பெருங்களத்தூர் அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அடையாள தெரியாத வாகனம் வாகனம் மீது மோதியுள்ளது.
இதில், நிலை தடுமாறிய வாகனம், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமையுந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் வாகனம் முற்றிலும் நொறுங்கியது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 5 பேரின் உடல்களையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.