“மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷால் தரப்பினர்   இன்று மூன்று மணிக்குள் நேரில் வந்து விளக்கமளித்தால் விஷால் மனுவை ஏற்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக  விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே..நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட 145 வேட்பு மனுக்களில் 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  72 மனுக்கள் ஏற்கப்பட்டன.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனுக்களும் அடங்கும்.

நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் இருவர் தாங்கள் கையெழுத்திட வில்லை என மறுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரங்கள், தவறான குடியிருப்பு முகவரி உள்ளிட்ட காரணங்களால் மனு நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி அறிவித்தார்.

நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு காரணம் கேட்டு நடிகர் விஷால் போராட்டம் நடத்தினார். மேலும், அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் வேட்பு மனு  மீண்டும் பரிசீலனைக்கு ஏற்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதையடுத்து நடிகர் விஷால் தரப்பினர், தனது மனு ஏற்கப்பட்டதாகவும், நீதி வென்றது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நள்ளிரவு மீண்டும் நடைபெற்ற பரிசீலனை அடிப்படையில், விஷாலின் வேட்பு மனுவை  மீண்டும்  நிராகரிப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

இந்த நிலையில் “விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் இருவர், அந்த மனுவில் தாங்கள் கையெழுத்திடவில்லை போலியான கையெழுத்தை யாரோ பதிந்திருக்கிறார்கள் என்று சொன்னதால் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அந்த இருவரை அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர் மிரட்டி, அப்படி பேசவைத்ததாக ஒரு ஆடியோவை விஷால் வெளியிட்டார்.

இந்த நிலையில், “மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷால் தரப்பினர்   இன்று மூன்று மணிக்குள் நேரில் வந்து விளக்கமளித்தால் விஷால் மனுவை ஏற்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.