உத்தரகாண்ட்:
சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது சொந்த ஊரான டேராடூனுக்கு சொகுசு காரை ஒட்டிச் சென்றார் ரிஷப் பண்ட். அதிகாலை 5:30 மணியளவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது எதிரே ஹ்ரிதுவாரில் இருந்து ஹரியானா மாநிலம் பானிபட் சென்று கொண்டிருந்த ஹரியானா அரசு பேருந்தின் ஓட்டுநர் சுஷில் குமார் எதிர்புறம் கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதை கவனித்தார்.

இதனை அடுத்து பேருந்தை நிறுத்திவிட்டு சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜித் இருவரும் கார் அருகே சென்றபோது விபத்தில் சிக்கி ரிஷப் பண்ட் கார் அருகே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை அங்கிருந்து மீட்டு அருகில் தூக்கி வந்த சில வினாடிகளில் கார் தீப்பற்றி எரிந்து முழுவதும் சாம்பலானது.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஹிரித்வாரில் சாலையில் உள்ள குழியை தவிர்க்க முயன்ற போது, விபத்து ஏற்பட்டது என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த சாலையில் உள்ள குழிகளை சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.