சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், இன்னும் 30 நிமிடங்களில் 65 அடியை ரிக் இயந்திரம் எட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித்தை மீட்க 2 மீட்டர் தொலைவில், 90 அடி ஆழத்திற்கு புதிய குழி ஒன்று தோண்டப்பட்டு, பின்னர் பக்கவாட்டில் குழி தோண்டி மீட்க அதிகாரிகள் முடிவெடுத்த நிலையில், இதற்காக பிரத்யேகமாக ரிக் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் 45 அடிக்கு மேல் ரிக் இயந்திரத்தால் துளையிட முடியாத காரணத்தால், போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முடிந்த பின்னர் மீண்டும் ரிக் இயந்திரம் துளையிட்டு வந்த நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு இயந்திரம் பழுதடைந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு வருகிறது. தற்போது வரை 50 அடி வரை துளையிடப்பட்டுள்ளதாகவும், இன்னும் 30 நிமிடங்களில் 65 அடியை எட்ட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.