டெல்லி: சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு (மறுஆய்வு) மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சேலம் அயோத்திராயப்பட்டினத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலை துறை சார்பில்,  சென்னை-சேலம் இடையே 276 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசின் உதவியுடன் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிடப்பட்டது.  இந்த சாலைக்காக  காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவில் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக  தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டு நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்கியது.இதற்கு  பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நெடுஞ்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம்  நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள் என ஏராளமானோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  ‘சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்தனர்.

இதை எதிர்த்து, மத்திய அரசின் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு (2020)  மே 27-ந் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம்  2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி,  சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.

இநத நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி. சேலம் அயோத்தியபட்டினத்தை சேர்ந்த யுவராஜ் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன்,  ஏற்கனவே சென்னை- சேலம் இடையே உள்ள 3 நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்யலாம் எனவும் புதிதாக விலை கொடுத்து நிலம் கையகப்படுத்த தேவையில்லை, புதிய திட்டம் தேவையில்லை எனவும், அதுகுறித்து ஆய்வு செய்யுமாறு  தெரிவித்துள்ளார்.