சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், இன்றுமுதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால்,  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுள்ளனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள வருவாயத்துறை அலுவலகங்கள்  வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. இதனால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். வருவாய் துறையில் பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் பெற்று அலுவலர்களின் பணி பாதுகாப்பு, வருவாய் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் முறையே இளநிலை முதல்நிலை வருவாய் ஆய்வாளர் என பெயர் மாற்றம் செய்வது, வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களில் நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு இல்லாத காரணத்தினால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  மாநிலம் முழுவதும் உள்ள 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் குதித்துள்ளனர்