டில்லி

நாளை தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்க உள்ளார்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமானது முதல், அங்கு பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராகப் பதவி வகித்தார். தெலுங்கானாவின் 3- ஆவது சட்டசபைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. அன்று 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மேலும் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 7 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாகக் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கானாவின் புதிய முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி நாளை  ஐதராபாத்தில் பதவியேற்கிறார்   நேற்று டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்\ இதை அறிவித்துள்ளார்.