சென்னை: தமிழக அரசு கேபிள் டிவி தொலைக்காட்சி சேவைக்காக பயனர்களுக்கு வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களில், பயன்படுத்தாத செட்-டாப் பாக்ஸ்களை ஆபரேட்டா்களிடம் திருப்பி அளியுங்கள் என பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகம் முழுவதும் மிகச்சிறந்த டிஜிட்டல் ஒளிபரப்பு கேபிள் தொலைக்காட்சி சேவையை குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் நிறுவனம் வழங்கி வருகிறது. இதுவரை உள்ளூா் கேபிள் ஆபரேட்டா்கள் மூலமாக 35.97 லட்சம் செட்-டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது எஸ்.டி., எனப்படும் சாதாரண தரத்திலான செட்-டாப் பாக்ஸ்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் 7 லட்சத்து 60 ஆயிரத்து 470 செட்-டாப் பாக்ஸ்கள் சந்தாதாரா்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் உள்ளன. இதனை உடனே வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதனை வழங்க முடியாவிட்டால் அதனை திருப்பி அளிக்க வேண்டும்.

அரசு நிறுவனத்திடம் இருந்து செட்-டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்டு அதனை வழங்காமல் இருப்பது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். சந்தாதாரா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள செட்-டாப் பாக்ஸ்கள் அரசுக்குச் சொந்தமானது.

எனவே, அதனை உடனடியாக சந்தாதாரா்களுக்கு வழங்க வேண்டும் அல்லது அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பொது மக்களும் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டா்களிடம் உடனே திருப்பி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.