சென்னை

ஜூலை 12 ஆம் தேதி முதல் தீபாவளிக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடங்குகிறது

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.  குறிப்பாக ரயில்கள், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். பெரும்பாலும் நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர்.

தீபாவளிக்கு முன்பாக ரயில்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வரையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி  வருவதால் முன்னதாக நவம்பர் 9-ந் தேதியே  சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12-ந் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

ரயில்வே அதிகாரி ஒருவர்,

” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12-ந் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.  அதன்படி ஜூலை 12-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந் தேதியும், 13-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ந் தேதியும், 14-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ந் தேதியும், 15-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ந் தேதியும், 16-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ந் தேதியும், 17-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14-ந் தேதியும், 18-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15-ந் தேதியும் பயணம் செய்ய முடியும்.

மேலும் வட இந்திய ரயில்களுக்கான முன்பதிவு தேதியில் ஒன்று அல்லது 2 நாட்கள் மாறுதல் இருக்கலாம். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும். இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையிலிருந்தே தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கப் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்.