சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. கீழடி கடல் கொண்ட நகரமா என்பதை ஆராய முதல்முறையாக தமிழக தொல்லியல் துறை சார்பில் நிலவியல் துறை பேராசிரியர்கள் அப்பகுதியின் மண்ணின் தன்மை குறித்த ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறை பேராசிரியர் ஜெயம் கொண்ட பெருமாள் தலைமையிலான குழு கீழடியில் 13 மீட்டர் ஆழம் வரை மண்ணின் தன்மை குறித்த ஆய்வுக்காக மாதிரிகளை சேகரிக்கின்றனர்.

இது குறித்து பேராசிரியர் பெருமாள் கூறி இருப்பதாவது: கீழடி, வைகை ஆற்றின் தடத்தில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. களிமண், ஆற்று மண், கருப்பு மண் என மண்ணின் அடுக்குகள் உள்ளன.  எந்த வகை மண் கீழடியில் உள்ளது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கடல் கொந்தளிப்பு, சுனாமி, இயற்கை பேரழிவு, போன்றவற்றால் கீழடி நகரம் அழிந்திருக்குமா, இடம் மாறி சென்றார்களா என்பதை பற்றி மண்ணின் தன்மையை வைத்து ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினார்.