புதுடெல்லி:
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது விதிகள் மீறப்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
குழந்தை இல்லாத தம்பதிகள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் முறை உலக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவிலும் இதுபோன்ற வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்வது அதிகரித்து வருகிறது.
Clip art illustration of a silhouette of a pregnant woman in black and white.
சமுக நோக்கோடு ஆரம்பமான இது, தற்போது வர்த்தக தொழிலாக மாறி விட்டது. இதன் காரணமாக மருத்துவ மனை நிர்வாகங்கள், அதற்கென தனி புரோக்கர்களை நியமித்து,  ஏழை பெண்கள்,  கிராமப்புறப் பெண்கள் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு பண ஆசை காட்டியும், மூளைச் சலவை செய்தும் வாடகைத் தாயாக செயல்பட அனுமதிக்க  வைக்கப்படு கின்றனர்.
வெளிநாட்டினர் பலரும்  இந்தியப் பெண்களை வாடகைத் தாய் முறைக்கு உட்படுத்தி குழந்தை பெறுகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான   நடவடிக்கை களைத் தடுக்கும் வகையில் புதிய மசோதா ஒன்றைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது.
அதற்கான வரைவு விதிகளை வகுக்க மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், ஹர்சிம்ரத் கெளர் பாதல் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த வரைவு மசோதா மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அண்மையில் அனுப்பப்பட்டிருந்த நிலையில்,  தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த மசோதா இதையடுத்து,  வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தில் உள்ள முக்கிய ஷரத்துக்கள்:
 
 

  • வெளிநாட்டுத் தம்பதியினர் இந்தியப் பெண்களை வாடகை தாயாகப் பயன்படுத்தத் தடை விதிக்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
  • வாடகைத் தாய் முறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது மற்றும் அதில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சட்ட உரிமைகள் வழங்குவது தொடர்பான ஷரத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
  • திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோர் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை.
  • சட்டவிரோதமாகவோ, வர்த்தக நோக்கிலோ குழந்தை பெற்றால், அதில் தொடர்புடையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.