சென்னை:
3 மாத காலத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் 3 மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிய வழக்கில் இரண்டுவாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மூன்று மாதகாலத்திற்கு வீட்டு உரிமையாளர்கள் வாடகைப் பணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், வீட்டு உரிமையாளர்கள் யாரும் வாடகை வசூலிப்பதை நிறுத்தவில்லை. இதனால், இது தொடர்பாக சில வாடகை குடியிருப்பாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால், பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் பொதுமக்களிடம் இருந்து, மூன்றுமாதங்கள் வரை வாடகை வசூலிக்கக்கூடாது என்று அரசாணை பிறப்பிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவில் ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் வேலையிழப்பு, வருமானம் இழப்பு ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாடகை வசூலிக்கும் விவகாரம் குறித்து தமிழக அரசு இரண்டுவாரங்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.