unnamed-1
சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரெமோ திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகி இருந்தாலும், திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இன்னும் அலைமோதி கொண்டு தான் இருக்கிறது…. வர்த்தக ரீதியாக அமோக வசூலை பெற்று வரும் ரெமோ திரைப்படத்திற்காக தங்களின் ஆதரவை தொடர்ந்து அளித்து வந்த விநியோகஸ்தர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக , தயாரிப்பாளரும், 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆர் டி ராஜா ஒரு பிரம்மாண்ட நன்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார். நேற்று சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்ற இந்த நன்றி விழாவில், ரெமோ திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்ரமணியம், சேலம் ராஜ மன்னார், மதுரை அழகர்சாமி, நார்த் ஆற்காடு – சவுத் ஆற்காடு ஸ்ரீநிவாசன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், திருச்சி பிரான்சிஸ் அடைக்கலராஜ், திருநெல்வேலி பிரதாப் ராஜா, வெளிநாட்டு விநியோகஸ்தர் யஹிரா பாய் ஆகியோரும், ரெமோ படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினர்களான தயாரிப்பாளர் ஆர் டி ராஜா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிரூத், சவுண்ட் என்ஜினீயர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ரூபன், ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி, பாடலாசிரியர்கள் விவேக் – கு கார்த்திக், கே எஸ் ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், ஆன்சன் மற்றும் யோகி பாபு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியரில் ஆரம்பித்து கதாநாயகன் வரை அனைவரும் ரெமோ படத்தின் நன்றி விழாவை உணர்ச்சிகரமான திருவிழாவாக மாற்றி விட்டனர்.
“ரெமோ படத்தின் வெற்றிக்கு ஒரு மூல காரணம் சிவகார்த்திகேயன்… அதே போல் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி சி சாரின் பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த
கைத்தட்டல்கள் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது…. தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தாயாக வலம் வந்து கொண்டிருப்பவர் சரண்யா… ரெமோ படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை அள்ளிக் குவித்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்கு பிறகு நான் விநியோகம் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை… ஆனால் ரெமோ படம் எனக்கு அளித்த உற்சாகமும், புத்துணர்வும், என்னை மீண்டும் விநியோக துறையில் ஈடுப்பட செய்தது… பொதுவாகவே விநியோகஸ்தர்கள் தான் ஒரு திரைப்படத்தை வாங்க தயாரிப்பாளரை நாடி செல்வர்…. ஆனால் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா எந்தவித ஈகோவும் இன்றி எங்களை வந்து சந்தித்தது எங்களுக்கு எல்லா விநியோகஸ்தர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…ரெமோ திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண் ஆர் டி ராஜா என்பதை நான் உறுதியாகவே சொல்வேன்…” என்று கூறினார் முன்னணி விநியோகஸ்தர்களுள் ஒருவரான திருப்பூர் சுப்ரமணியம்.
“ஒரு திரைப்படத்திற்கு நன்றி விழா என்பதை நான் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்… சினிமா மீது அளவு கடந்த அன்பும், சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து கொள்ளும் குணம் கொண்ட மனிதர்களால் தான் இத்தகைய செயல்களை செய்ய முடியும்…. அப்படி நான் பார்த்த தயாரிப்பாளர்களுள் ஆர் பி சொளத்ரி சாரும், ஏ எம் ரத்னம் சாரும் சிலர்…. அப்படி ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் ஆர் டி ராஜாவை பார்க்கிறேன்….ரெமோ படத்தின் உண்மையான வெற்றிக்கு சான்றாக திகழ்பவர்கள் விநியோகஸ்தர்கள்….அவர்களை மேடையேற்றி, தன்னுடைய நன்றிகளை தெரிவித்த தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவிற்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்….” என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.
“ரசிகர்களுக்கு தரமான படங்களை வழங்கி, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே எங்களின் தலையாய கடமை. எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் இரண்டரை வருட உழைப்பு தான் ‘ரெமோ’….தயாரிப்பாளர் ஆர் டி ராஜா அவர்களுக்கும், அவருடைய குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை… ஆனால் அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன்….இவ்வளவு தூரம் எங்களுக்கு ஆதரவு வழங்கி, தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் என்னுடைய அன்பான ரசிகர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….” என்று கூறினார் சிவகார்த்திகேயன்.