சென்னை: சென்னையில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளது, அதனால்,  கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யுங்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் கட்டணம் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி,  பார்க்கிங் கட்டணம் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என  உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு திரையங்கம் சார்பில்   சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சென்னை சென்டரல் ரயில் நிலையம், பிராட்வே பகுதிகளில் ஒருமணி நேரத்தில் 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், விமான நிலையத்தில் 150 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், திரையரங்குகளில் வாகன நிறுத்தத்திற்கு குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்க்கு  விசாரித்த நீதிபதி ஆர். சுப்ரமணியன், அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டி 2017-ம் ஆண்டு அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வாகன நிறுத்தக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.