சென்னை: மநீம கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதனால்,  கமல்ஹாசன் ஆவேசமடைந்துள்ளார். சாதராரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. திமுக உள்பட சில கட்சிகள் தேர்தல்  பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.  கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவது தொடா்பான உத்தரவுகள் 1968-இல் பிறக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

தோ்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டு அதன்பின் அதனை இழந்த கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் வேட்பாளா்களை நிறுத்தும் கட்சிக்கு, பட்டியலில் உள்ள சின்னங்களில் ஒன்று பொது சின்னமாக வழங்கப்படும். சின்னங்களின் பட்டியலில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பத்து சின்னங்களைத் தோ்ந்தெடுத்து தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து பொது சின்னமாக சம்பந்தப்பட்ட கட்சிக்கு தோ்தல் ஆணையம் அளிக்கும்.

அதன்படி, டிடிவி தினகரன் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. ஆனால்,  தேர்தல் ஆணையம், தமிழகத்தில்  கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு “பேட்டரி டார்ச்” சின்னத்தை  ஒதுக்கவில்லை, ஆனால், புதுச்சேரியில் அவர் கேட்ட டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது.

அதேநேரத்தில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு “பேட்டரி டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளது. இது கமலஹாசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. டார்ச் லைட் சின்னம் தர தேர்தல் ஆணையம் மறுத்து உள்ளது. சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.