சென்னை,

த்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அவற்றின் மீதான கலால் வரியை 2% குறைத்து உள்ளது. அதுபோல மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை  5% குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைத்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வற்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ‘தினமும் விலை நிர்ணயம்’ என்ற கொள்கையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் உயர்த்தி மக்கள் மீது, குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்கமுடியாத சுமையைத் தூக்கி வைத்துள்ளது.

அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உள்பட அனைவரும் தாங்கமுடியாத துயரத்தைக் கடந்த மூன்றரை வருடங்களாக அனுபவித்து வருகிறார்கள்.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் போதெல்லாம் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும் அதற்குத் துணையாக, வாய்மூடி மவுனியாக இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசு திணிக்கும் சுமையை அப்படியே அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு கைமாற்றி அனுப்பி விட்டு கை கழுவுகிறது.

இதுபோன்றதொரு சூழ்நிலை உருவானபோது, முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைக்கும் பொருட்டு வரிகளைக் குறைத்தார். 2006ல் டீசல் விலை உயர்ந்தபோது, டீசலுக்கான விற்பனை வரியை 25 சதவீதத்திலிருந்து 23.43 சதவீதமாக குறைத்தார். பிறகு 2000ல் டீசல் விலையை மத்திய அரசு ஏற்றியபோது, டீசலுக்கு விதிக்கப்பட்ட 23.43 சதவீத வரியை 21.43 சதவீதமாக குறைத்தார். இப்படி இருமுறை டீசலுக்கு மட்டும் மொத்தம் 3.57 சதவீத வரியை குறைத்தார்.

இதுதவிர, 2011ல் பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியபோது, பெட்ரோலுக்கான விற்பனை வரியை 3 சதவீதம் குறைத்தார். ஆக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி 6.57 சதவீதம் குறைக்கப்பட்டு, பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் தி.மு.க. அரசு செய்தபோலவே, தற்போது குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 1 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற மாநில அரசுகள் ஒவ்வொன்றும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் போது, பா.ஜ.க.வின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் ‘குதிரை பேர’ அரசு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதும், வாட் வரியை குறைத்து அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் இருப்பதும், இங்குள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அமைச்சர்களுக்கோ தமிழக மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலையில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோல, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறு தொழில்கள் பற்றியும் கூட இந்த மக்கள் விரோத அரசுக்கு அக்கறையில்லை என்பது வேதனைக்குரியது.

இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 70.96 பைசாவும், டீசல் ஒன்றுக்கு ரூ 60.04 பைசாவும் கொடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த ‘குதிரை பேர’ அரசுக்கும் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆகவே, ஏற்கனவே இருந்த கழக அரசும், தற்போது குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசுகளும் எடுத்துள்ள நடவடிக்கைகளை பின்பற்றி, தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க ‘குதிரை பேர’ அரசு நடவடிக்கை எடுத்து, அவற்றின் மீதான வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.