சென்னை

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் பல பகுதிகளில் கனம்ழை பெய்யலாம் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இன்னும் 12 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 11 ஆம் தேதி காலை வட தமிழகத்துக்கு வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்  விடுத்துள்ளது. இவ்வாறு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 20 முதல் 25 செ.மீ மேல் மழைப் பதிவு ஆகக்கூடும்.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.  மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய அதி கனமழை கொட்டித் தீர்த்தது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், “வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 11-ம் தேதி அதிகாலை வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் (10, 11-ம் தேதிகளில்) கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 11 ஆம் தேதிக்குப் பின்னர் மழை படிப்படியாகக் குறையும்.  மீனவர்கள் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளது.

நாளை, 10-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் 11-ஆம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.