டில்லி

பாடபுத்தகங்களில் இந்தியா என்பதை பாரத் என மாற்ற என் சி இ ஆர் டி க்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது 

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு எனப்படும் என்.சி.இ.ஆர்.டி க்கு பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி அமைப்பால் பள்ளி பாட திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குப் பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

என் சி இ ஆர் டி உயர்மட்ட குழுவில் 8 பேர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்மட்ட குழு மிக முக்கியமான சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது.

அவற்றில் ஒன்றாக,

“இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயராக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலேயர்களுடைய காலனி ஆதிக்க அடையாளங்களை எல்லாம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிற இந்த சூழலில் இனி பாட புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக ‘பாரத்’ என்ற வார்த்தை இடம்பெற வேண்டும்”

என்ற பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

குழுவில் உள்ள 8 உறுப்பினர்களும் இந்த பரிந்துரைக்கு ஒருமனதாக ஒப்புதல் வழங்கி உள்ளனர். விரைவில் இந்த பரிந்துரை குறித்து என்.சி.இ.ஆர்.டி முடிவெடுக்க உள்ளது.