புதுச்சேரி:

பிரச்சினைகள் குறித்து திறந்தவெளியில் விவாதம் நடத்த தயார் என்ற துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் அழைப்பை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மக்கள் நலத்திட்டங்களை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரன்பேடி தடுத்த நிறுத்துவதாக குற்றஞ்சாட்டி, கடந்த 13-ம் தேதி முதல் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு அம்மாநில முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் வருகிறார்.

இந்நிலையில், சனிக்கிழமை அன்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல்வர் நாராயணசாமியுடன் விவாதிக்க தயார் என்று தெரிவித்திருந்தார்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் அழைப்பை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார்.

காந்தி சிலை அருகே இருந்தாலும், கடற்கரை பகுதியாக இருந்தாலும் எந்த இடத்திலும் மக்கள் பிரச்சினை குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் விவாதிக்க தாங்கள் தயார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தலைமை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் தவிர வேறு யாரும் இந்த விவாதத்தின் போது இருக்கக் கூடாது என கிரண்பேடிக்கு நாராயணசாமி நிபந்தனை விதித்தார்.

முன்னதாக, கிரண் பேடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் வீட்டில் முதல்வர் நாராயணசாமி கருப்புக் கொடி ஏற்றினார்.

இதற்கு உடனே பதில் அளித்த கிரண்பேடி, டவுன்ஹாலில் இந்த விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். அரசு கொள்கைகள், அமலாக்கம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்ற கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 30 தொகுதிகளிலும் கருப்பு கொடி ஏற்றுமாறு தன் கட்சினரை முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறும்போது, கிரண்பேடியை உடனே திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் மெயில் அனுப்பி உள்ளேன்.

பிப்ரவரி 21-ம் தேதி துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

மக்கள் நலனுக்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் என்னை கைது செய்வேன் என்று கிரண்பேடி மிரட்டுகிறார். நாங்கள் சிறைக்குச் செல்ல தயார். இது போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் பணிய மாட்டோம்.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தனியார் நிகழ்ச்சிகளாகவே உள்ளன. மேலும் என்ஜிஓ நடவடிக்கைகளும் ஈடுபடுகிறார்

அவரது என்ஜிஓ நடவடிக்கைக்கு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது. தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்றார்.

இந்நிலையில், கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி நடத்திவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று நேரில் சென்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.