சென்னை: வேளச்சேரியில் வாக்குச்சாவடி எண் 92ல் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி அமைதியான முறையில் முடிந்தது. மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு விவிபேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் மடக்கி பிடித்து அதை கொண்டு போனவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பின்னர் தெரிவித்தார். அந்த விவிபேட் இயந்திரம், 50 நிமிடம் பயன்பாட்டில் இருந்ததாகவும், அதில் மொத்தம் 15 ஒப்புகை சீட்டுக்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இரு சக்கர வாகனத்தில் விவிபேட், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

இந்நிலையில் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92ல் வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.