பாட்னா
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி பல இடங்களில் சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒரு 5 நட்சத்திர ஓட்டல் விருந்தில் கலந்துக் கொண்டுள்ளார்
பாட்னா நகரில் தலித்துகள் அதிகம் வசிக்கும் சீமா கோதி என்னும் இடத்தில் ஒரு பாலத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று அம்பேத்கர் பிறந்த தினத்தை ஒட்டி நடந்தது. அந்த விழாவில் மத்திய பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அடிக்கல் நாட்டினார். அவருடன் பீகாரின் பாஜக அமைச்சர் நந்த கிஷோர் யாதவ் மற்றும் இரு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழா முடிந்ததும் தலித்துக்களுடன் கட்சி ஒற்றுமையைக் கொண்டாடாட சமபந்தி விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநிலம் எங்கும் இது போல பல விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன அந்த விருந்தின் போது தலித் மக்களுடன் உரையாடி அரசின் திட்டங்கள் பற்றி அவர்களை அறிந்துக் கொள்ள வைக்கவும் அவர்களின் குறைகளை தெரிந்துக் கொள்ளவும் பாஜக தனது தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் மத்திய அமைச்சர் இந்த விருந்தில் கலந்துக் கொள்ளவில்லை. மாநில அமைச்சர் நந்தகிஷோர் யாதவ் ரவிசங்கர் பிரசாத்துக்கு 5 நட்சத்திர ஓட்டலான மௌரியா ஓட்டலில் ஒரு அலுவலக நிகழ்வு உள்ளதாக தெரிவித்தார். ஆனால் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அந்த ஓட்டலில் தலித் தொழிலதிபர்களுடன் ஒரு விருந்தில் கலந்துக் கொண்டுள்ளார். இந்த விவரத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.