1948ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியின் அஞ்சல் தலை 4 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தபால் தலை ஏலத்தை இங்கிலாந்தை சேர்ந்த  ஸ்டான்லி கிப்பான்ஸ் நிறுவனம் நடத்தியது.

இந்தியா சுதந்திரமடைந்த அடுத்த வருடமான 1948ம் ஆண்டு கவர்னர் ஜெனரல் அலுவலகப் பணிகளுக்காக 10 ரூபாய் மதிப்பீட்டில்  மகாத்மா காந்தியின் தபால்தலை வெளியிடப்பட்டது.

காந்தி படுகொலைக்கு பிறகு 1948ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரியவகை புகைப்பட தபால்தலை இது.

இந்த மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த 4 தபால் தலையை 4 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஏல நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற ஒற்றை தபால் தலைகள் அதிக விலைக்கு ஏலம் போகும். ஆனால், இந்த 4 தபால் தலைகள் ஒன்றாக இணைந்த நிலையில், விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இந்த தபால்தலை அதிக விலைக்கு விற்பனையாகி ரெக்கார்டை உருவாக்கி உள்ளதாக ஸ்டான்லி கிப்பான்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக அந்நிறுவனத்தில் பங்குகள் 7 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும்,  பழமையான தபால்தலைகளுக்கு சர்வதேச அளவில் இன்றளவும் நல்ல வரவேற்பு உள்ளதை இந்த விற்பனை நிரூபித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.