டில்லி,

டிகை ரம்யாவுக்கு காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியில் நடிகை நக்மாவும், செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் நடிகை குஷ்பூவும் இருக்கும் நிலையில், தற்போது  நடிகை ரம்யாவை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தவர் நடிகை ரம்யா. இவர் குத்து ரம்யா என்றே  அழைக்கப்பட்டு வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாண்டியா தொகுதி எம்.பி. இடைத்தேர்தலில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு , 47 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று எம்.பி-ஆக தேர்வானார்.

இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின்  பேத்தியான இவர், கட்சியின் பிரச்சாரக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

டிவிட்டரில் நடிகை ரம்யாவை சுமார் 5 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். 34 வயதான ரம்யா கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாகவும் விளங்குகிறார். சமீபத்தில் பாகிஸ்தானை புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கியவர்.

கன்னட நடிகையான ரம்யா, தமிழில் ‘குத்து’, ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘தூண்டில்’ ‘வாரணம் ஆயிரம்’, ‘சிங்கம் புலி’ போன்ற படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக ராகுல்காந்தி நியமித்துள்ளார்.