அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,, ராமேஸ்வரம்.

விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அவனது கருத்தை ஏற்க மறுத்ததோடு, காலால் எட்டி உதைக்கச் சென்றான். எனவே, விபீஷணன் இராவணனைப் பிரிந்து இராமபிரானிடம் வந்தான். இராமபிரான் இராமேஸ்வரத்தில் தங்கியிருந்ததை அறிந்த அவன் அவரைச் சந்தித்து ஆசிபெற்றான்.
அவனது நற்குணத்தை அறிந்த ராமன், அவனைத் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். மேலும், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே முறைப்படி விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். இதனடிப்படையில் இங்கு ராமருக்கு கோயில் எழுப்பப்பட்டது. கோதண்டராமர் என்ற திருநாமம் அவருக்குச் சூட்டப்பட்டது.
வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் இராமர், சீதை மற்றும் இலட்சுமணர் காட்சி தருகின்றனர். இராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், “கோதண்டராமர்” என்றும், தலம் “கோதண்டம்” என்றும் அழைக்கப்படுகிறது.
அருகில் “பரிந்துரைத்த ஆஞ்சநேயர்” இருக்கிறார். விபீஷணன் ராமபிரானைத் தேடி வந்தபோது, ராமருடன் இருந்த வானரப்படையினர், விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர். ஆனால், ஆஞ்சநேயர் ராமனிடம், விபீஷணனின் நடவடிக்கைகளை தான் இலங்கையில் கவனித்து வந்ததாகவும், அவனது சிறப்பியல்புகளையும் எடுத்துக் கூறி, அவனை இராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார். இதனால் இவர் இப்பெயர் பெற்றார். இவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை இராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை.
இராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோயில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு இராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி நிற்கிறான். இது அபூர்வமான காட்சியாகும். இராமனின் அருள் பெற்றதால் தான் விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமும் கொடுத்து, “விபீஷணாழ்வார்” என்கின்றனர். அளவில் சிறிய இந்தக்கோயிலில், கருடாழ்வாரும், முன் மண்டபத்தில் இராமானுஜரும் மட்டும் உள்ளனர்.
குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த இராமர். தரம் கெட்ட இராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம். தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். விபீஷணர் பட்டாபிஷேகம், ஆனி மாத வளர்பிறை நவமியன்று நடக்கிறது.
திருவிழா:
புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று விசேஷ பூஜை, ஆனியில் விபீஷணர் பட்டாபிஷேகம்.
பிரார்த்தனை:
உயர்பதவி கிடைக்க, தீயவர்களிடமிருந்து விலகியிருக்க, நல்வழியில் நடக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம்.
வழிகாட்டி:
இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ., நடந்தால் கோயிலை அடையலாம்.