சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் மறு குடியமர்வு தொடர்பான அரசின் கொள்கைகள், சட்ட விதிகளைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி கங்கா புரவாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறு குடியமர்த்தப்படும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டது.

அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னையில் கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்து வசித்த 14,257 குடும்பங்களில், 13,514 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளன என்றும் அவர்களுக்கு சட்டப்படி அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது.

தமிழக அரசின் இந்த திட்டங்கள் பாராட்டத்தக்கவை என்று தெரிவித்து இந்தத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள்

“கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்வி பெறுவது என்பது அடிப்படை உரிமை. அந்த அடிப்படையில் கல்வியை வழங்குவது அரசின் கடமை.  இது போல மறு குடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்”

என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.