c
சென்னை:
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று புழல் சிறையில் மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. அதே நேரம், ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என்று  அங்கிருந்த காவலர் தெரவித்த  ஆடியோவை ராம்குமாரின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ளார். (விவரம் தனி செய்தியாக)
இந்த நிலையில், “ராம்குமாரின் மரணம் திட்டமிட்டு நடந்துள்ளது” என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, “ சிறையில் நடக்கும் மர்மங்களுக்கு  சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பாவார்கள்.  சுவாதி வழக்கை விரைவில் முடிப்பதற்கான முயற்சியாக இது இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சிறையில் பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் நிலையில் ராம்குமாரின் உயிரிழப்பு சந்தேகம் அளிக்கிறது. மின்சார ஒயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை சொல்கிறது. ஆனால்  சிறைகளில்  வயர்கள் வெளியில் இருக்கும்படி இருக்காது .  சுவற்றில் பதிக்கப்பட்ட நிலையில்தான் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் .
நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் சிறையில் அடைக்கும்போது மட்டும் எப்படி உடல்நிலை சரியில்லாமல் போகிறது என்ற கேள்வி எழுகிறது.
ராம்குமாரின் மரணம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளதாகவே தோன்றுகிறது” என்று முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.