“ஜெயலலிதா, சசிகலா இடையேயான உண்மையான உறவு அதிர்ச்சிகரமானது. அதை எனது “சசிகலா” திரைப்படத்தில் வெளிப்படையாக காண்பிப்பேன்” என்று பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து , திரைப்படம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்துபவர் இந்திப்பட இயக்குநர்  இயக்குனர் ராம்கோபால் வர்மா.

இவர், சில நாட்களுக்கு முன், ‘சசிகலா’ என்ற பெயரில் படம் எடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் பற்றி, பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், இவர், “நான் எடுக்கும், ‘சசிகலா’ படம், சசிகலாவின் பின்புலத்தைச் சொல்லும் கதையாக இருக்கும். மன்னார்குடி மாபியா மட்டுமே, இதை புரிந்து கொள்ள முடியும். ஜெயலலிதாவின் ஆன்மா, சசிகலாவின் சிறை அறைக்கு வரும் என்று, நான்  உறுதியாக நம்புகிறேன்.
ஜெயலலிதா, சசிகலா இடையே இருந்த உறவு குறித்த உண்மையை, போயஸ் கார்டன் பணியாளர்கள், என்னிடம் கூறினார்கள். அது நான் நினைத்து பார்க்க முடியாத அளவு அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதை, என் திரைப்படத்தில் காட்டுவேன். இதை, சசிகலா மறுக்க மாட்டார்” என்று ட்விட்டியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.

மேலும் அவர், “தமிழகத்தில் பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள்,  எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதற்கு காரணம், அவர்கள் அனைவரும், சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என, போயஸ் கார்டன் தோட்டக்காரர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என்றும் ராம்கோபால் வர்மா ட்விட்டியுள்ளார்.