சென்னை:

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா உள்பட 3 பேரும் இன்று சட்டப்பேரவை செயலரிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஏப்ரல் 26ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய தமிழக கட்சிகளின்  எம்எல்ஏக்கள் நிலவரப்படி திமுகவுக்கு 3 இடமும், அதிமுகவுக்கும் 3 இடமும் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

இந்த பதவிகளுக்கு திமுக சார்பில்,  திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழக சட்டமன்ற செயலாளரான தேர்தல் அதிகாரியிடம் தங்களது வேட்பு மனுவையும் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கலின் போது திமுகவைச் சேர்ந்த துரைமுருகன், ஐ. பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, கே.என். நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.