டில்லி:

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள  பேரறிவாளன், ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும், தன்னை  விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் பேரறிவாளன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை விடுத்துள்ள உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 1999-ம் ஆண்டு மே 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், தான் நிரபராதி என்றும், சிபிஐ சரியாக விசாரணை செய்யவில்லை என்றும்,  சுப்ரீம் கோர்ட்டின் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் தரப்பில்  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.

இதற்கு சிபிஐயிடம் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 12ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் பேரறிவாளன் குறித்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து பேரறிவாளன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளனின் வாக்குமூலத்தினை அடிப்படையாக கொண்டு அவரது வழக்கறிஞரிடம் சரமாரியாக  கேள்வி எழுப்பினர்.

அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும். வெடிகுண்டு தயாரிக்க முக்கியமாக இருந்ததே அந்த பேட்டரிகள்தான். 9 வாட் பேட்டரியை கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்று டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு தெரியாதா? என்றும்  பேரறிவாளனுக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் இருக்கின்றன என்ற நீதிபதிகள், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என்று கூறினர்.

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  அதற்கு உங்கள் பதில் என்ன..? என்று பேரறிவாளன் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.