சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வேலூர் சிறையில் கடந்த மாதம் நடைபெற்ற சோதனையின்போது, ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி, முருகன் அறையிலிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், சிறைவிதிகளை மீறியதால் முருகனுக்கு வழங்கப்பட்டு வந்த சிறை சலுகைகளை, சிறைத்துறை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சுமார் 17 நாட்கள் உண்ணாவிரதத்துக்கு பிறகு, சிறை அதிகாரிகள் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்

இந்த நிலையில், ஏற்கனவே உயர்நீதி மன்றம் அளித்த உத்தரவுபடி, வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க மனைவி நளினிக்கு வழங்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

இதை கண்டித்தும் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உண்ணாவிரதம் இன்று 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், முருகனை சந்திக்க அனுமதிக்குமாறு, அவரது மனைவி நளினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களுக்கு அனுமதி வழங்குமாறு சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முருகனை அறிவுறுத்தி உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.