ரஜினிகாந்த் தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார்.   இதில் ஒன்று 2.0.  சுமார் 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படம் இன்னும் வெளியாகாதது ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கியது.   இதுவரை இரண்டு முறைக்கு மேல் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டும் படம் வெளியாவது தள்ளி போகிறது.

இதற்கு 3டி மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தாமதம் என கூறப்படுகிறது.   தொழில் நுட்ப விஷயத்தில் 2.0 பட டைரக்டர் ஷங்கர் மிகவும் பிடிவாதமாக இருப்பதால் வெளியாவதில் தாமதம் உண்டாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.    படம் வெளியிடுவது தள்ளிப் போவதால்  ஷங்கர் மீது படம் தயாரிக்கும் லைகா நிறுவனம் கடும் வருத்தம் அடைந்துள்ளதாம்.

உடனடியாக இந்தப் படத்தின் வேலைகளை முடித்து வெளியிட வேண்டும் என லைகா நிறுவனம் ஷங்கரை வற்புறுத்தியும் அவர் இன்னும் முடிக்காமல் இருக்கிறாராம்.   மேலும் இந்த தொழில்நுட்ப வேலைகளால் செலவு கூடிக் கொண்டே போவதால்  ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை தாண்டி செலவு எங்கேயோ போய் விட்டதாம்.   மேலும் நாளாவதால் ரசிகர்கள் ஆர்வம் குறைந்து விடுமோ என அச்சமும் லைகா நிறுவனத்துக்கு உண்டாகி இருக்கிறதாம்.

இதற்கு பின்பு தயாரிப்பு தொடங்கிய ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.