சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழலில், தனது ரசிகர்களை மீண்டும் ரஜினி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா என எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

செப்டம்பர் மாதம்  2-வது வாரத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே  மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவும் பல துண்டுகளாக சிதறுண்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த அசாதாரண சூழ்நிலையில், திரையுலகினரும் தங்களது அரசியல் கனவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் முதல்கட்டமாக ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், போருக்கு தயாராக இருங்கள் என்று ரசிகர்களிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் ஏமாற்றிவிட்டு ‘காலா’ படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையில் அவரை சந்தித்து பேசிய, தமிழருவி மணியன், ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறி உள்ளார்.

இந்நிலையில், அவர் நடித்துவரும் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் 2-வது வாரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே புதிய படம் தொடங்கும்போது ரசிகர்களை சந்தித்து பேசிய ரஜினி, தற்போது படம் முடிவடைந்ததும், அந்த படத்தை வியாபார நோக்கில் வெற்றிபெற வைக்கவே ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றும் சமூக வலைதளங்களிலும், அரசியல் விமர்சகர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.