சென்னை:
மிழகத்தில் சட்ட சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலத்தின் மாபெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில் ”அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என 2017இல் கர்ஜித்த ரஜினி இன்னமும் கட்சி தொடங்காமல் இருப்பதை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அண்மையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர், போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது.அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்துடன் மக்களை சந்திப்போம்.

தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும்.கொரோனா காரணமாக என்னால் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எனக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. எவ்வளவு சீக்கிரம் எனது முடிவை அறிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என்று கூறிவிட்டு சென்றார்.

இந்த நிலையில், ஜனவரியில் கட்சித் துவங்கப்போவதாகவும், அதன் தேதியை டிசம்பர் 31ல் அறிவிக்கப்போவதாகவும் தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். அதாவது, குறுகிய காலத்தில் ஆட்சியை பிடிக்க ரஜினி நினைப்பது அதீத நம்பிக்கை. ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு. இரண்டையும் ஒன்றாக இணைப்பது குழப்பமான முயற்சி” என இவ்வாறு விமர்சித்துள்ளார்.