மதுரை: கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மதுரை சிறையில் அடைக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆவின் முறைகேடு, அரசு வேலை முறைகேடு உள்பட பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 15நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை யடுத்து, அவர் மதுரை சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங் களால் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜியை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அவர் நள்ளிரவில் விருதுநகர் அழைத்து வரப்பட்டு, 3 மணி நேரத்திற்கும் மேலாக ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து, ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பரம்பீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அவரை மத்திய சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடு காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்து செல்லப்படுகிறார்.