சென்னை: அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்கிறோம். அடுத்த பருவமழைக்கு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காத வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தண்ணீர் தேங்குவது தொடர்கிறது. இதனால், மாநகராட்சி அலுவலர்களைக் கொண்டும், மின் மோட்டார்கள் மூலமும், மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இநத் நிலையில்,  சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டல அலுவலத்தில் இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே.சேகர் பாபு, திரு.வி.க. மண்டலத்தில் நீர்நிலைகளின் அருகிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கின்ற மக்களுக்கு விலையில்லா கொசுவலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி, மண்டலக்குழு தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பருவமழையானது கடந்த 31 ஆம் தேதி தொடங்கி இருக்கின்றது. அந்த நாள் முதல் இதுவரை இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையினால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமலிருக்க சென்னை மாநகராட்சியுடன்,  அனைத்து  அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

சாலைகளில் குண்டும் குழியுமாக இருக்கின்ற இடத்தில் வெரிமிக்ஸ் போடப்பட்டு இருக்கின்றது. கடந்த காலத்தில் மழை பெய்தபோது பட்டாளம் பகுதியில் அதிகமான நீர் தேங்கி இருந்தது. அது வடிய அதிக நாட்கள் ஆனது. ஆனால் தற்போது மழை பெய்து விட்டவுடன் முழுவதுமாக அந்த தண்ணீர் வடிகின்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

முதலமைச்சர்,  தாழ்வான பகுதிகளில் தற்போது எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அவற்றை எல்லாம் கணக்கெடுத்து, அடுத்த பருவமழைக்குள் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காத சூழலை உருவாக்குவதற்கு பணிகளை மேற்கொண்டுள்ளார்கள்.  திருவிக மண்டலத்திற்கு  மட்டும்  கணேஷ், ரஞ்சித் மற்றும் திருமதி திவ்யதர்ஷினி என மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றுகின்ற பணியாகட்டும், சாலையோரம் மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. எந்த பாதிப்பு வந்தாலும் சமாளிப்பதற்குண்டான அனைத்து பணிகளையும்  இந்த அரசு தயாராக செய்து கொண்டிருக்கின்றது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், கோவில்களில் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்கின்ற வகையில் பாதுகாப்பு அறைகளை ஏற்படுத்த சொல்லி ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது.  அந்த பாதுகாப்பு அறைகளை ஏற்படுத்துகின்ற பணி கடந்த காலங்களில் தொய்வுற்று இருந்தது. திமுக ஆட்சிக்கு பதவிக்கு வந்ததும், ப முதலில் வடபழனி பரத்வாஜ் சுசாமி திருக்கோயிலில்  மாதிரி பாதுகாப்பறை ஒன்றை ஏற்படுத்தினோம். அந்த மாதிரி பாதுகாப்பறையானது மிகவும் பயனுள்ளதாகவும், உறுதித்தன்மை உள்ளதாகவும் கண்டறியப்பட்டது.  அதனைத் தொடர்ந்து  1200 பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது, அந்தந்த மண்டல இணை ஆணையர்களுக்கும், திருக்கோயில்களின் இணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் அந்தப் பணிகளை விரைந்து மேற்கொண்டு ஓராண்டு காலத்திற்குள் முழுமையாக முடிக்கின்ற ஒரு நல்ல சூழலை உருவாக்கி தருவோம். நீதிமன்றம் கூறிய கருத்தை கணக்கில் கொண்டு அதனை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற பணியை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தும்என்றார்.

அதுபோல திருக்கோயில்களை இந்து அமைப்புகள் தான் பராமரிக்க வேண்டும் என சமீபகாலமாக கோரிக்கைகள் வலுப்பெற்று வருவது தொடர்பான கேள்விக்கு,
இந்து அமைப்புகளிடம் இருக்கின்ற பொழுது திருக்கோயில்கள் எவ்வளவு பராமரிக்கப்படுமோ அதைவிட கூடுதலாக  அக்கறை கொண்டு இந்த அரசு திருக்கோவில்கள் பராமரிப்பதில், பக்தர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் இந்திய துணைக் கண்டத்திலேயே சிறந்து விளங்குகிறது. அதனால், கோவில்கள் இந்து அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால்  திருக்கோயிலை டெண்டர் கோரியா  ஒப்படைக்க முடியும் என கேள்வி எழுப்பியவர், அது  சாத்தியமில்லாதது என்றார்.

மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் என்றாலும் மக்களாட்சி வந்த பிறகு மக்களாட்சி செய்கின்ற அரசுக்கு தான் திருக்கோயிலை பராமரிக்கும் உரிமை கள். அதில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்,  குறைகள் எது இருந்தாலும் யார் வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம். அதனை நிறைவு செய்கின்ற பணிகளை  மேற்கொண்டு வருகிறோம் என்றார்.