சென்னை:
வெப்பச்சலனம் காரணமாகம், அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதால்,  தமிழகத்தின் சில  மாவட்டங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மதுரை, திருச்சி, சேலம், கரூர், தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40லிருந்து 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11.30 இருந்து மாலை 3.30 வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் மத்திய ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.